திருக்கேதீச்சரம் ஆலய தேவாரம்
திருக்கேதீச்சரம் ஆலயம்2-107-2627:
விருது குன்றமா மேருவில் நாணர
வாவனல் எரியம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளுங்
கருது கின்றவு[ர் கனைகடற் கடிகமழ்
பொழிலணி மாதோட்டங்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே.
2-107-2628:
பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரங் கைதொழக்
கெடுமிடர் வினைதானே.
2-107-2629:
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
கருவினை யடையாவே.
2-107-2630:
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நுலினர்
மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே.
2-107-2631:
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்
தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும்
அன்பராம் அடியாரே.
2-107-2632:
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
தீச்சரம் பிரியாரே.
2-107-2633:
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்
காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டந்
தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே
தீச்சர மதுதானே.
2-107-2634:
தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்
தெடுத்தவன் முடிதிண்டோ ள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே
தீச்சரத் துள்ளாரே.
2-107-2635:
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
திருந்தஎம் பெருமானே.
2-107-2636:
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
ஏழைமை கேலேன்மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே.
2-107-2637:
மாடெ லாமண முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத்
தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின் பத்தர்காள்
பரகதி பெறலாமே.