திருவிற்கோலம் ( கூவம் ) ஆலய தேவாரம்
திருவிற்கோலம் ( கூவம் ) ஆலயம்3-23-3042:
உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.
3-23-3043:
சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே.
3-23-3044:
ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாக மாகவுஞ்
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.
3-23-3045:
விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ்
சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
3-23-3046:
முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்
கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே.
3-23-3047:
தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
3-23-3048:
விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோனி டர்படச்
சிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
3-23-3049:
திரிதரு புரமெரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமன தாற்ற லால்உருத்
தெரியலன் உறைவிடந் திருவிற் கோலமே.
3-23-3050:
சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ்
சீர்மையி னானிடந் திருவிற் கோலமே.
3-23-3051:
கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.