HolyIndia.Org

திருமுதுகுன்றம் ஆலய தேவாரம்

திருமுதுகுன்றம் ஆலயம்
1-12-119:
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட 
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங் 
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு 
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே. 

1-12-120:
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன் 
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம் 
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண் 
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. 

1-12-121:
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண் 
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம் 
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு 
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. 

1-12-122:
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா 
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார் 
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும் 
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. 

1-12-123:
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார் 
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில் 
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு 
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 

1-12-124:
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற் 
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில் 
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார் 
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 

1-12-125:
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (மூ)முடிய 
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில் 
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை 
முழவோடிசை (மூமூ)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே. 
(மூ) முடியர் என்றும் பாடம். 
(மூமூ) நடமுன் செயும் என்றும் பாடம். 

1-12-126:
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன் 
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில் 
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (மூ) 
முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே. 
(மூ) குறை யில்லா என்றும் பாடம். 

1-12-127:
இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய 
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன் 
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே 
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. 

1-12-128:
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான் 
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார் 
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி 
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. 

1-12-129:
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப் 
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த 
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும் 
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே. 

1-53-570:
தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் 
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும் 
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் 
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே. 

1-53-571:
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார் 
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு 
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள் 
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே. 

1-53-572:
வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி 
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில் 
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர் 
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே. 

1-53-573:
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர் 
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும் 
நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும் 
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே. 

1-53-574:
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச் 
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத் 
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ 
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. 

1-53-575:
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி 
சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும் 
அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு 
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. 

1-53-576:
மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும் 
இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த 
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள் 
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே. 

1-53-577:
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக் 
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால் 
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும் 
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. 

1-53-578:
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை 
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின் 
மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட 
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே. 

1-53-579:
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை 
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன் 
.... .... .... .... .... .... .... .... 
.... .... .... .... .... .... .... .... 

1-93-1003:
நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை 
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே. 

1-93-1004:
அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர் 
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே. 

1-93-1005:
ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று 
கைகள் கூப்புவீர், வைய முமதாமே. 

1-93-1006:
ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர் 
வாச மலர்தூவப், பாச வினைபோமே. 

1-93-1007:
மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர் 
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. 

1-93-1008:
மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார் 
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே. 

1-93-1009:
விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார் 
படையா யினசூழ, உடையா ருலகமே. 

1-93-1010:
பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும் 
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 

1-93-1011:
இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை 
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 

1-93-1012:
தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான் 
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே. 

1-93-1013:
நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன் 
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே. 

1-131-1405:
மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் 
எண்குணங்களும் விரும்பும்நால்வே 
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் 
பளிங்கேபோல் அரிவைபாகம் 
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் 
கருதுமூர் உலவுதெண்ணீர் 
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா 
ரிக்கொழிக்கும் முதுகுன்றமே. 

1-131-1406:
வேரிமிகு குழலியொடு வேடுவனாய் 
வெங்கானில் விசயன்மேவு 
போரின்மிகு பொறையளந்து பாசுபதம் 
புரிந்தளித்த புராணர்கோயில் 
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல 
மலருதிர்த்துக் கயமுயங்கி 
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற் 
புகுந்துலவு முதுகுன்றமே. 

1-131-1407:
தக்கனது பெருவேள்வி சந்திரனிந் 
திரனெச்சன் அருக்கன்அங்கி 
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே 
தண்டித்த விமலர்கோயில் 
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு 
குயர்தெங்கின் குவைகொள்சோலை 
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா 
நீள்வயல்சூழ் முதுகுன்றமே. 

1-131-1408:
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய 
விறலழிந்து விண்ணுளோர்கள் 
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத் 
தேவர்களே தேரதாக 
மைம்மருவு மேருவிலு மாசுணநாண் 
அரியெரிகால் வாளியாக 
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த 
முதல்வனிடம் முதுகுன்றமே. 

1-131-1409:
இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள் 
ஒருபாலா யொருபாலௌ;கா 
துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப் 
பிடமென்பர் உம்பரோங்கு 
கழைமேவு மடமந்தி மழைகண்டு 
மகவினொடும் புகவொண்கல்லின் 
முழைமேவு மால்யானை இரைதேரும் 
வளர்சாரல் முதுகுன்றமே. 

1-131-1410:
நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த 
நாதனிடம் நன்முத்தாறு 
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு 
கரையருகு மறியமோதி 
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு 
நீர்குவளை சாயப்பாய்ந்து 
முகையார்செந் தாமரைகள் முகம்மலர 
வயல்தழுவு முதுகுன்றமே. 

1-131-1411:
அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் 
இருந்தருளி யமரர்வேண்ட 
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின் 
ஒன்றறுத்த நிமலர்கோயில் 
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங் 
கெழிற்குறவர் சிறுமிமார்கள் 
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி 
முத்துலைப்பெய் முதுகுன்றமே. 

1-131-1412:
கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல் 
இலங்கையர்கோன் கண்ணும்வாயும் 
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை 
மலையைநிலை பெயர்த்தஞான்று 
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன் 
று{ன்றிமறை பாடவாங்கே 
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான் 
வாய்ந்தபதி முதுகுன்றமே. 

1-131-1413:
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் 
பூந்துழாய் புனைந்தமாலும் 
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந் 
துறநாடி யுண்மைகாணாத் 
தேவாருந் திருவுருவன் சேருமலை 
செழுநிலத்தை மூடவந்த 
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ 
மேலுயர்ந்த முதுகுன்றமே. 

1-131-1414:
மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட் 
டுடையாரும் விரவலாகா 
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும் 
உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர் 
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை 
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று 
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து 
தவம்புரியும் முதுகுன்றமே. 

1-131-1415:
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும் 
முதுகுன்றத் திறையைமூவாப் 
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய 
கழுமலமே பதியாக்கொண்டு 
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான 
சம்பந்தன் சமைத்தபாடல் 
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர் 
நீடுலகம் ஆள்வர்தாமே. 

2-64-2157:
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே 
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய் 
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி 
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே. 

2-64-2158:
எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார் 
சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை 
மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு 
முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே. 

2-64-2159:
நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந் 
தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப் 
பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த 
மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே. 

2-64-2160:
தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங் 
குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி 
இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர் 
முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே. 

2-64-2161:
வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ் 
சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார் 
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும் 
முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே. 

2-64-2162:
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி 
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் 
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் 
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. 

2-64-2163:
வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை 
நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில் 
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த 
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே. 

2-64-2164:
அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ் 
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதிய[ர் 
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட 
முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. 

2-64-2165:
கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின் 
றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில் 
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி 
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே. 

2-64-2166:
அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன் 
முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக் 
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள் 
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே. 

3-34-3159:
வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட 
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம் 
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர் 
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே. 

3-34-3160:
வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு 
பொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன் 
மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ் 
செறியுளார் புறவணி திருமுது குன்றமே. 

3-34-3161:
ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமை 
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல் 
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந் 
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே. 

3-34-3162:
உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும் 
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம் 
உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த் 
திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே. 

3-34-3163:
கடியவா யினகுரல் களிற்றினைப் பிளிறவோர் 
இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி 
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடஞ் 
செடியதார் புறவணி திருமுது குன்றமே. 

3-34-3164:
கானமார் கரியின்ஈர் உரிவையார் பெரியதோர் 
வானமார் மதியினோ டரவர்தாம் மருவிடம் 
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடுந் 
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே. 

3-34-3165:
மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட 
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே 
அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச் 
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே. 

3-34-3166:
காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினை 
ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற 
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ் 
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே. 

3-34-3167:
ஆடினார் கானகத் தருமறை யின்பொருள் 
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி 
ஏடினார் மலர்மிசை அயனுமா லிருவருந் 
தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே. 

3-34-3168:
மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர் 
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின் 
வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத் 
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே. 

3-34-3169:
திண்ணினார் புறவணி திருமுது குன்றரை 
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல் 
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப் 
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே. 

3-99-3864:
முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்கள் உலகில்ஆ வாரே. 

3-99-3865:
மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறும் நலமே. 

3-99-3866:
முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே. 

3-99-3867:
முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே. 

3-99-3868:
முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே. 

3-99-3869:
முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்
றியன்றவ ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே. 

3-99-3870:
மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக்காய்ந் தீரே
கட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே. 

3-99-3871:
மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே. 

7-43-7659:
நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார் 
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர் 
பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள் 
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே. 

7-43-7660:
ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி 
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ 
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய் 
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே. 

7-43-7661:
தொண்டர்கள் பாட விண்ணோர்க ளேத்த உழிதர்வீர் 
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே 
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர் 
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே. 

7-43-7662:
இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென் 
விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர் 
அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர் 
முளைப்பி றைச்சென் னிச்சடை முடிமுது குன்றரே. 

7-43-7663:
ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும் 
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ 
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம் 
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே. 

7-43-7664:
இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக் 
குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே 
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள் 
முழைவளர் ஆளி முழக்க றாமுது குன்றரே. 

7-43-7665:
சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள் 
மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே 
குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள் 
முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே. 

7-43-7666:
அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தொறுஞ் 
சந்தி கள்தோறும் பலிக்குச் செல்வது தக்கதே 
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம் 
முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே. 

7-43-7667:
செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய 
அட்டு மின்சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே 
பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ 
முட்டி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே. 

7-43-7668:
எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார் 
பத்தியி னாலிடு வாரி டைப்பலி கொண்மினோ 
எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல் 
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரே. 

7-43-7669:
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப் 
பித்தனொப் பானடித் தொண்ட னுரன் பிதற்றிவை 
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார் 
எத்தவத் தோர்களு மேத்து வார்க்கிடர் இல்லையே. 

7-63-7869:
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
 வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி 
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி 
 கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி 
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி 
 திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் 
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7870:
திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால் 
 சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம் 
அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும் 
 அமரர் நம்பிகும ரன்முதல் தேவர் 
தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி 
 தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும் 
எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7871:
வருந்த அன்றுமத யானை உரித்த 
 வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம் 
அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த 
 அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம் 
புரிந்த நம்பிபுரி நுலுடை நம்பி 
 பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி 
இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7872:
ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் 
 உரிய நம்பிதெரி யம்மறை அங்கங் 
கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக் 
 குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ் 
சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி 
 செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும் 
ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7873:
குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக்
 குலைத்த நம்பிசிலை யாவரை கையிற் 
பற்று நம்பிபர மானந்த வெள்ளம் 
 பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால் 
மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன் 
 மதியி லேன்படு வெந்துயர் எல்லாம் 
எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7874:
அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
 ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள் 
தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி 
 சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந் 
தரித்த நம்பிசம யங்களின் நம்பி 
 தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை 
இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7875:
பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும் 
 பிரமனும் என்றிவர் நாடியுங் காணா 
உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே 
 உலகு நம்பிஉரை செய்யும தல்லால் 
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி 
 முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட 
தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7876:
சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
 தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி 
வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய 
 வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார் 
அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி 
 அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற 
இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7877:
காண்டு நம்பிகழற் சேவடி என்றுங் 
 கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை 
ஆண்டு நம்பியவர் முன்கதி சேர 
 அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத் 
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத் 
 திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி 
ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 

7-63-7878:
கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை 
 கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம் 
பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா... 
............ ............ ............ ........... 
............ ............ ............ ...........