குற்றாலம் ஆலய தேவாரம்
குற்றாலம் ஆலயம்1-99-1069:
வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1-99-1070:
பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்.
1-99-1071:
செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக
நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.
1-99-1072:
பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்
அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்
நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1-99-1073:
மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்
இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த
சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.
1-99-1074:
மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்
கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
1-99-1075:
நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்
காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்
சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.
1-99-1076:
போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்
கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1-99-1077:
அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.
1-99-1078:
பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்
இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.
1-99-1079:
மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
2-71-2234:
திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்
குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.
2-71-2235:
நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.
2-71-2236:
வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி
ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.
2-71-2237:
பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக்
கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்
கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே.
2-71-2238:
தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே.
2-71-2239:
நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல்
கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே.
2-71-2240:
பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக்
குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே.
2-71-2241:
ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வு[ன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல்
பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே.
2-71-2242:
அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த
குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே.
2-71-2243:
மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக்
கூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே.
2-71-2244:
கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்
நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே.