HolyIndia.Org

திருதெங்கூர் ஆலய தேவாரம்

திருதெங்கூர் ஆலயம்
2-93-2475:
புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக் 
கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் 
இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர் 
விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 

2-93-2476:
சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங் 
கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன் 
பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த 
வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 

2-93-2477:
அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட் 
படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன் 
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண் 
விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 

2-93-2478:
பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார் 
கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர் 
வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி 
விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 

2-93-2479:
சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால் 
தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை 
கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக 
விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 

2-93-2480:
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர் 
எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச் 
சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற 
வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 

2-93-2481:
நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார் 
முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப் 
பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி 
வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 

2-93-2482:
எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக் 
கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர் 
தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர் 
விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 

2-93-2483:
தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார் 
பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால் 
ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும் 
வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே. 

2-93-2484:
சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர 
இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக் 
கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த 
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே 

2-93-2485:
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக் 
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் 
சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல் 
பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.