HolyIndia.Org

திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் ஆலய தேவாரம்

திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் ஆலயம்
5-62-5848:
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் 
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் 
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய 
திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே. 

5-62-5849:
யாவ ருமறி தற்கரி யான்றனை 
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை 
நாவின் நல்லுரை யாகிய நாதனைத் 
தேவனைப் புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே. 

5-62-5850:
அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் 
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே 
கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே. 

5-62-5851:
மாத னத்தைமா தேவனை மாறிலாக் 
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் 
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே. 

5-62-5852:
குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் 
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் 
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
அண்ட னைக்கண் டருவினை யற்றேனே. 

5-62-5853:
பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட 
மைந்த னைம்மண வாளனை மாமலர்க் 
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே. 

5-62-5854:
உம்ப ரானை உருத்திர மூர்த்தியை 
அம்ப ரானை அமலனை ஆதியைக் 
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே. 

5-62-5855:
மாசார் பாச மயக்கறு வித்தெனுள் 
நேச மாகிய நித்த மணாளனைப் 
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
ஈச னேயென இன்பம தாயிற்றே. 

5-62-5856:
இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு 
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே 
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் 
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே. 

5-62-5857:
அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட் 
டிரக்க மாகி அருள்புரி யீசனைத் 
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே.