திருச்சேறை (உடையார் கோவில்) ஆலய தேவாரம்
திருச்சேறை (உடையார் கோவில்) ஆலயம்3-86-3723:
முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
3-86-3724:
புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதோர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதோர் வாய்மையர்
இனமுடை மணியினோ டரைசிலை யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகள்தம் வளநகர் சேறையே.
3-86-3725:
புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம தேறுவ ரீடுலா
வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர மனைதொறுந்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.
3-86-3726:
துடிபடும் இடையுடை மடவர லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
3-86-3727:
அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை யடிகள்தம் வளநகர் சேறையே.
3-86-3728:
மத்தர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ டுருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால்
அத்திரம் அருளும்நம் அடிகள தணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
3-86-3729:
பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தருஞ்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
3-86-3730:
கட்டுர மதுகொடு கயிலைநல் மலைநலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி யொருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ அருள்செயுஞ்
சிட்டர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
3-86-3731:
பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடியவை யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயோர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே.
3-86-3732:
துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை நலமில மெனவிடன்
முகிழ்தரும் இளமதி யரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
3-86-3733:
கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதோர் சேறைமேற்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம் பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர் தீருமே.
4-73-4865:
பெருந்திரு இமவான் பெற்ற
பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய
மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால்
அங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4-73-4866:
ஓர்த்துள வாறு நோக்கி
உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி
மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை ஆளாக் கொண்டு
பிறவிவான் பிணிக ளெல்லாந்
தீர்த்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4-73-4867:
ஒன்றிய தவத்து மன்னி
உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்தும்
நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி
விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4-73-4868:
அஞ்சையும் அடக்கி ஆற்ற
லுடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று
மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி
விசையொடு பாயுங் கங்கைச்
செஞ்சடை யேற்றார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4-73-4869:
நிறைந்தமா மணலைக் கூப்பி
நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கப் போதே
எழில்கொள்சண் டீசன் என்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4-73-4870:
விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப்
பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு
ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4-73-4871:
சுற்றுமுன் இமையோர் நின்று
தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன
மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்னம்
ஒள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4-73-4872:
முந்தியிவ் வுலக மெல்லாம்
படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென்
றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை
அடிமுடி யறியா வண்ணஞ்
செந்தழ லானார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
4-73-4873:
ஒருவரும் நிக ரிலாத
ஒண்டிறல் அரக்கன் ஓடிப்
பெருவரை யெடுத்த திண்டோ ள்
பிறங்கிய முடிகள் இற்று
மருவியெம் பெருமா னென்ன
மலரடி மௌ;ள வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
5-77-5997:
பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்
கூரி தாய அறிவுகை கூடிடுஞ்
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன் நாமம் நவிலவே.
5-77-5998:
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
5-77-5999:
பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
5-77-6000:
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே.
5-77-6001:
எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5-77-6002:
தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5-77-6003:
வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.
5-77-6004:
குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5-77-6005:
பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
5-77-6006:
பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வு[ன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.