திருமருகல் ஆலய தேவாரம்
திருமருகல் ஆலயம்1-6-55:
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-56:
நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
நேர்புரி நுன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-57:
தோலொடு நுலிழை சேர்ந்தமார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-58:
நாமரு கேள்வியர் வேள்வியோவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-59:
பாடல் முழவும் விழவும்ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேயிட மாகஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-60:
புனையழ லோம்புகை அந்தணாளர்
பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-61:
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நுன்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-62:
அந்தமும் ஆதியும் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-63:
இலைமரு தேயழ காகநாளும்
இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் டேரரை நீங்கிநின்று
நீதரல் லார்தொழும் மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாயருளாய்
மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
1-6-64:
நாலுங் குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே.
2-18-1655:
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.
2-18-1656:
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.
2-18-1657:
அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.
2-18-1658:
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.
2-18-1659:
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.
2-18-1660:
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.
2-18-1661:
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே.
2-18-1662:
இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே.
2-18-1663:
எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.
2-18-1664:
அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.
2-18-1665:
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
5-88-6092:
பெருக லாந்தவம் பேதைமை தீரலாந்
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோ ரானந்தம்
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
5-88-6093:
பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.
5-88-6094:
சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம்
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே.
5-88-6095:
ஓது பைங்கிளிக் கொண்பால் அமுதூட்டிப்
பாது காத்துப் பலபல கற்பித்து
மாது தான்மரு கற்பெரு மானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
5-88-6096:
இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம்
உன்னி யொண்கொடி உள்ள முருகுமே.
5-88-6097:
சங்கு சோரக் கலையுஞ் சரியவே
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும்
அங்க வீதி அருகணை யாநிற்கும்
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.
5-88-6098:
காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.
5-88-6099:
நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
மாட நீண்மரு கற்பெரு மான்வரிற்
கூடு நீயென்று கூட லிழைக்குமே.
5-88-6100:
கந்த வார்குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.
5-88-6101:
ஆதி மாமலை அன்றெடுத் தானிற்றுச்
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.