HolyIndia.Org

திருமருகல் ஆலய தேவாரம்

திருமருகல் ஆலயம்
1-6-55:
அங்கமும் வேதமும் ஓதுநாவர் 
அந்தணர் நாளும் அடிபரவ 
மங்குல் மதிதவழ் மாடவீதி 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
செங்கய லார்புனற் செல்வமல்கு 
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் 
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-56:
நெய்தவழ் மூவெரி காவலோம்பும் 
நேர்புரி நுன்மறை யாளரேத்த 
மைதவழ் மாட மலிந்தவீதி 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் 
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் 
கைதவழ் கூரெரி யேந்தியாடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-57:
தோலொடு நுலிழை சேர்ந்தமார்பர் 
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ 
மால்புகை போய்விம்மு மாடவீதி 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த 
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் 
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-58:
நாமரு கேள்வியர் வேள்வியோவா 
நான்மறை யோர்வழி பாடுசெய்ய 
மாமரு வும்மணிக் கோயில்மேய 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த 
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-59:
பாடல் முழவும் விழவும்ஓவாப் 
பன்மறை யோரவர் தாம்பரவ 
மாட நெடுங்கொடி விண்தடவும் 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த 
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
காடக மேயிட மாகஆடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-60:
புனையழ லோம்புகை அந்தணாளர் 
பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப 
மனைகெழு மாட மலிந்தவீதி 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த 
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-61:
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன் 
பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து 
மாண்டங்கு நுன்மறை யோர்பரவ 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த 
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-62:
அந்தமும் ஆதியும் நான்முகனும் 
அரவணை யானும் அறிவரிய 
மந்திர வேதங்க ளோதுநாவர் 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் 
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
கந்தம் அகிற்புகை யேகமழுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-63:
இலைமரு தேயழ காகநாளும் 
இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும் 
நிலையமண் டேரரை நீங்கிநின்று 
நீதரல் லார்தொழும் மாமருகல் 
மலைமகள் தோள்புணர் வாயருளாய் 
மாசில்செங் காட்டங் குடியதனுள் 
கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே. 

1-6-64:
நாலுங் குலைக்கமு கோங்குகாழி 
ஞானசம் பந்தன் நலந்திகழும் 
மாலின் மதிதவழ் மாடமோங்கும் 
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த 
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார் 
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் 
சூலம்வல் லான்கழ லேத்துபாடல் 
சொல்லவல் லார்வினை யில்லையாமே. 

2-18-1655:
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே. 

2-18-1656:
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. 

2-18-1657:
அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. 

2-18-1658:
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. 

2-18-1659:
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. 

2-18-1660:
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே. 

2-18-1661:
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே. 

2-18-1662:
இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே. 

2-18-1663:
எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே. 

2-18-1664:
அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே. 

2-18-1665:
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. 

5-88-6092:
பெருக லாந்தவம் பேதைமை தீரலாந் 
திருக லாகிய சிந்தை திருத்தலாம் 
பருக லாம்பர மாயதோ ரானந்தம் 
மருக லானடி வாழ்த்தி வணங்கவே. 

5-88-6093:
பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய் 
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர் 
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு 
வேடங் கைதொழ வீடெளி தாகுமே. 

5-88-6094:
சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை 
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக 
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம் 
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே. 

5-88-6095:
ஓது பைங்கிளிக் கொண்பால் அமுதூட்டிப் 
பாது காத்துப் பலபல கற்பித்து 
மாது தான்மரு கற்பெரு மானுக்குத் 
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே. 

5-88-6096:
இன்ன வாறென்ப துண்டறி யேனின்று 
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும் 
மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம் 
உன்னி யொண்கொடி உள்ள முருகுமே. 

5-88-6097:
சங்கு சோரக் கலையுஞ் சரியவே 
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும் 
அங்க வீதி அருகணை யாநிற்கும் 
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே. 

5-88-6098:
காட்சி பெற்றில ளாகிலுங் காதலே 
மீட்சி யொன்றறி யாது மிகுவதே 
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத் 
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே. 

5-88-6099:
நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும் 
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள் 
மாட நீண்மரு கற்பெரு மான்வரிற் 
கூடு நீயென்று கூட லிழைக்குமே. 

5-88-6100:
கந்த வார்குழல் கட்டிலள் காரிகை 
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக 
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று 
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே. 

5-88-6101:
ஆதி மாமலை அன்றெடுத் தானிற்றுச் 
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும் 
ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம் 
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.