அம்பர் மாகாளம் ஆலய தேவாரம்
அம்பர் மாகாளம் ஆலயம்1-83-893:
அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.
1-83-894:
தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.
1-83-895:
திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடைய[ரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கண்மேல் ஒழியா வு[னம்மே.
1-83-896:
கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.
1-83-897:
அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.
1-83-898:
பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.
1-83-899:
மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.
1-83-900:
கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.
1-83-901:
சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே.
1-83-902:
மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே.
1-83-903:
வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே.
2-103-2583:
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்
கருவினை அடையாவே.
2-103-2584:
அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
ளிசைவன பலபூதம்
மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்
பயன்தலைப் படுவாரே.
2-103-2585:
குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
வல்வினை அடையாவே.
2-103-2586:
எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்
தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே.
2-103-2587:
நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய
கதியம் என்னுள வானவர் என்னுளர்
கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
டேத்துதல் புரிந்தோர்க்கே.
2-103-2588:
கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகந்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
வுலகினில் உயர்வாரே.
2-103-2589:
தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
பெருமையைப் பெறுவாரே.
2-103-2590:
பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீ|ன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
கனலிடைச் செதிளன்றே.
2-103-2591:
உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
கவலையுங் களைவாரே.
2-103-2592:
பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
பீலிகொண் டுழல்வாருங்
கண்ட நுலருங் கடுந்தொழி லாளருங்
கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்
பரவுதல் செய்வோமே.
2-103-2593:
மாறு தன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாளத்
தீறும் ஆதியு மாகிய சோதியை
ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
குற்றங்கள் குறுகாவே.
3-93-3799:
படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநுலர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
3-93-3800:
கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
3-93-3801:
பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
3-93-3802:
நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
ஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
3-93-3803:
புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
3-93-3804:
பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்
அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
3-93-3805:
சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
3-93-3806:
பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே.
3-93-3807:
வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்
எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்
அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
3-93-3808:
சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நுல்
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே.
3-93-3809:
செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக்
மூகம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.