தென்குடித்திட்டை ஆலய தேவாரம்
தென்குடித்திட்டை ஆலயம்3-78-3635:
நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.
3-78-3636:
சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே.
3-78-3637:
போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நுலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே.
3-78-3638:
காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே.
3-78-3639:
சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே.
3-78-3640:
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே.
3-78-3641:
உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே.
3-78-3642:
உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே.
3-78-3643:
பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே.
3-78-3644:
வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே.
3-78-3645:
கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே.
4-90-5021:
கையது காலெரி நாகங்
கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட
விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம
ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே.
4-90-5022:
கைத்தலை மான்மறி யேந்திய
கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி
யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக
ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே.
4-90-5023:
முன்பின் முதல்வன் முனிவனெம்
மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர்
புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன்
சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை
நாமடைந் தாடுதுமே.
4-90-5024:
பத்தர்கள் நாளும் மறவார்
பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து
பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம
ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே.
4-90-5025:
ஆனணைந் தேறுங் குறிகுண
மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும்
புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு
பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை
நாமடைந் தாடுதுமே.
4-90-5026:
எண்ணும் எழுத்துங் குறியும்
அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய
வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும்
பிரான்றிரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை
நாமடைந் தாடுதுமே.
4-90-5027:
ஊர்ந்த விடையுகந் தேறிய
செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர்
பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்
பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு
தையடைந் தாடுதுமே.
4-90-5028:
எரியும் மழுவினன் எண்ணியும்
மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் தேயமும்
நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு
திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க
ளோடடைந் தாடுதுமே.
4-90-5029:
மையணி கண்டன் மறைவிரி
நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய
வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம
ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே.
4-90-5030:
வருத்தனை வாளரக் கன்முடி
தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப்
பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர் பிரான்றிரு
வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே.