திருக்கொட்டையூர் ஆலய தேவாரம்
திருக்கொட்டையூர் ஆலயம்3-95-3820:
எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே.
3-95-3821:
யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே.
3-95-3822:
இளமதி நுதலியோ டின்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே.
3-95-3823:
இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழல்தொழும்
அடியவர் அருவினை யிலரே.
3-95-3824:
இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீருமை உள்குவார்
அமைகில ராகிலர் அன்பே.
3-95-3825:
எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே
தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடை யோரே.
3-95-3826:
எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே.
3-95-3827:
ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே.
3-95-3828:
இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
அயனுமால் அறிவரி யீரே
அயனுமால் அறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே.
3-95-3829:
ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவ
ராழ்துயர் அருவினை யிலரே.
3-95-3830:
ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே.
4-72-4855:
விண்ணவர் மகுட கோடி
மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
பேடலி யாணர் போலும்
வண்ணமால் அயனுங் காணா
மால்வரை எரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4856:
பன்னிய மறையர் போலும்
பாம்பரை யுடையர் போலுந்
துன்னிய சடையர் போலுந்
தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும்
மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4857:
மறியொரு கையர் போலும்
மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப்
பணிகொள வல்லர் போலுஞ்
செறிவுடை அங்க மாலை
சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4858:
விடமலி கண்டர் போலும்
வேள்வியை அழிப்பர் போலுங்
கடவுநல் விடையர் போலுங்
காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும்
பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4859:
அளிமலர்க் கொன்றை துன்றும்
அவிர்சடை யுடையர் போலுங்
களிமயிற் சாய லோடுங்
காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும்
வெண்பொடி யணிவர் போலும்
எளியவர் அடியர்க் கென்றும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4860:
கணையமர் சிலையர் போலுங்
கரியுரி உடையர் போலுந்
துணையமர் பெண்ணர் போலுந்
தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர் கூடி
அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4861:
பொருப்பமர் புயத்தர் போலும்
புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு
மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும்
உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4862:
காடிடம் உடையர் போலுங்
கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும்
வெண்மதிக் கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை
கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4863:
காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் டோ ளர் போலும்
நீறுடை யுருவர் போலும்
நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப்
பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும்
இன்னம்பர் ஈச னாரே.
4-72-4864:
ஆர்த்தெழு மிலங்கைக் கோனை
அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது
படைகொடுத் தருள்வர் போலுந்
தீர்த்தமாங் கங்கை தன்னைத்
திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏ ழுலகும் வைத்தார்
இன்னம்பர் ஈச னாரே.
4-101-5124:
மன்னு மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு
ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத்
தொண்டர்க் கமுதருத்தி
இன்னல் களைவன இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5125:
பைதற் பிணக்குழைக் காளிவெங்
கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ்
செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங் கூற்றை
யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5126:
சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை
சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின
மன்னு மறைகள்தம்மிற்
பிணங்கிநின் றின்னன வென்றறி
யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5127:
ஆறொன் றியசம யங்களின்
அவ்வவர்க் கப்பொருள்கள்
வேறொன் றிலாதன விண்ணோர்
மதிப்பன மிக்குவமன்
மாறொன் றிலாதன மண்ணொடு
விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5128:
அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி
னாலட லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை
நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு
வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5129:
கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன்
தேடின கேடுபடா
ஆண்டும் பலபல வு[ழியு
மாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின்
றாடின மேவுசிலம்
பீண்டும் கழலின இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5130:
போற்றுந் தகையன பொல்லா
முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன ஆறு
சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய
தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5131:
பயம்புன்மை சேர்தரு பாவந்
தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக்
குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென்
றேசதுர் வேதங்கள்நின்
றியம்புங் கழலின இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5132:
அயன்நெடு மால்இந் திரன்சந்தி
ராதித்தர் அமரரெல்லாஞ்
சயசய என்றுமுப் போதும்
பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும்
நாகர் வியன்நகர்க்கும்
இயபர மாவன இன்னம்ப
ரான்றன் இணையடியே.
4-101-5133:
தருக்கிய தக்கன்றன் வேள்வி
தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொன் உவமன்
இலாதன வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை
பத்தும் நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின இன்னம்ப
ரான்றன் இணையடியே.
5-21-5434:
என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
5-21-5435:
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.
5-21-5436:
கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
5-21-5437:
மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே.
5-21-5438:
தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.
5-21-5439:
விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
5-21-5440:
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணாற்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.
5-21-5441:
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே.
5-21-5442:
விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமுந்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.
5-21-5443:
சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வு[ன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.
6-89-7121:
அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும்
அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்
தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7122:
கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வருந் தாமே போலும்
உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7123:
தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கண்ட மிறையே கறுத்தார் போலுங்
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7124:
வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்
ஒளிநீறு பூசு மொருவர் போலுந்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந்
தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7125:
சூழுந் துயர மறுப்பார் போலுந்
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்
ஆட லுகந்த அழகர் போலுந்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு
தன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7126:
பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்
பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்
பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்
வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7127:
பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கல்லாதார் காட்சிக் கரியார் போலுங்
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்
பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7128:
மட்டு மலியுஞ் சடையார் போலும்
மாதையோர் பாக முடையார் போலுங்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்
காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7129:
கருவுற்ற காலத்தே என்னை யாண்டு
கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்
செருவிற் புரமூன்று மட்டார் போலுந்
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6-89-7130:
அலங்கற் சடைதாழ ஐய மேற்று
அரவ மரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொன் றுடையார் போலும்
வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை
விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.