HolyIndia.Org

திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) ஆலய தேவாரம்

திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) ஆலயம்
2-31-1797:
சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1798:
வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1799:
வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்
காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1800:
மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1801:
ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1802:
விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1803:
ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதின னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1804:
வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1805:
பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1806:
அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறிய லூரே. 

2-31-1807:
நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. 

7-30-7523:
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் 
வைத்துகந்து திறம்பா வண்ணங் 
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் 
கண்டானைக் கருப்ப றியலூர்க் 
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட 
மயிலாடுங் கொகுடிக் கோயில் 
எம்மானை மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7524:
நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் 
உள்ளத்தே நிறைந்து தோன்றுங் 
காற்றானைத் தீயானைக் கதிரானை 
மதியானைக் கருப்ப றியலூர்க் 
கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள் 
அவளோடுங் கொகுடிக் கோயில் 
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7525:
முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப் 
பூப்பறித்து மூன்று போதுங் 
கட்டார்ந்த இண்டைகொண் டடிச்சேர்த்தும் 
அந்தணர்தங் கருப்ப றியலூர் 
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் 
குழகனைக் கொகுடிக் கோயில் 
எட்டான மூர்த்தியை நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7526:
விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி 
வினைபோக வேலி தோறுங் 
கருந்தாள வாழைமேற் செங்கனிகள் 
தேன்சொரியுங் கருப்ப றியலூர்க் 
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள் 
அவளோடுங் கொகுடிக் கோயில் 
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7527:
பொடியேறு திருமேனிப் பெருமானைப் 
பொங்கரவக் கச்சை யானைக் 
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை 
குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க் 
கொடியேறி வண்டினமுந் தண்டேனும் 
பண்செய்யுங் கோகுடிக் கோயில் 
அடியேறு கழலானை நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7528:
பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப் 
போற்றிசைத்துப் பூசை செய்து 
கையினா லெரியோம்பி மறைவளர்க்கும் 
அந்தணர்தங் கருப்ப றியலூர்க் 
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ 
மயிலாலுங் கொகுடிக் கோயில் 
ஐயனையென் மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7529:
செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் 
தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின் 
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி 
கண்படுக்குங் கருப்ப றியலூர்க் 
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள் 
அவளோடுங் கொகுடிக் கோயில் 
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7530:
பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் 
பன்னாளும் பாடி யாடிக் 
கறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன் 
முக்கண்ணன் கருப்ப றியலூர்க் 
குறையாத மறைநாவர் குற்றேவல் 
ஒழியாத கொகுடிக் கோயில் 
உறைவானை மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7531:
சங்கேந்து கையானுந் தாமரையின் 
மேலானுந் தன்மை காணாக் 
கங்கார்ந்த வார்சடைகள் உடையானை 
விடையானைக் கருப்ப றியலூர்க் 
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் 
பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில் 
எங்கோனை மனத்தினால் நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7532:
பண்டாழின் இசைமுரலப் பன்னாளும் 
பாவித்துப் பாடி யாடிக் 
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் 
பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க் 
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் 
புறங்கூறுங் கொகுடிக் கோயில் 
எண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ 
தவர்நமக் கினிய வாறே. 

7-30-7533:
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் 
மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க் 
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் 
பூஞ்சோலைக் கொகுடிக் கோயில் 
இலைமலிந்த மழுவானை மனத்தினா 
லன்புசெய் தின்ப மெய்தி 
மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப் 
பன்னுரைத்த வண்ட மிழ்களே.