HolyIndia.Org

திருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) ஆலய தேவாரம்

திருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) ஆலயம்
7-7-7286:
மத்த யானை ஏறி மன்னர் 
சூழவரு வீர்காள் 
செத்த போதில் ஆரும் இல்லை 
சிந்தையுள் வைம்மின்கள் 
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா 
வம்மின் மனத்தீரே 
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7287:
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு 
துயரம் மனைவாழ்க்கை 
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு 
நெஞ்ச மனத்தீரே 
நீற்றர் ஏற்றர் நீல கண்டர் 
நிறைபுனல் நீள்சடைமேல் 
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7288:
செடிகொ ளாக்கை சென்று சென்று 
தேய்ந்தொல் லைவீழாமுன் 
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள் 
பட்டு மயங்காதே 
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் 
கோவண ஆடையுடை 
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7289:
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் 
வஞ்ச மனத்தீரே 
யாவ ராலும் இகழப் பட்டிங் 
கல்ல லில்வீழாதே 
மூவ ராயும் இருவ ராயும் 
முதல்வன் அவனேயாம் 
தேவர் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7290:
அரித்து நம்மேல் ஐவர் வந்திங் 
காறலைப் பான்பொருட்டாற் 
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய் 
ஊர்ப்பு றஞ்சேராமுன் 
வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர் 
வஞ்ச மதில்மூன்றும் 
எரித்த வில்லி எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7291:
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் 
பொத்தடைப் பான்பொருட்டால் 
மையல் கொண்டீர் எம்மோ டாடி 
நீரும் மனத்தீரே 
நைய வேண்டா இம்மை யேத்த 
அம்மை நமக்கருளும் 
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7292:
கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் 
செற்ற மனம்நீக்கி 
வாசம் மல்கு குழலி னார்கள் 
வஞ்ச மனைவாழ்க்கை 
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி 
என்பணிந் தேறேறும் 
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7293:
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு 
ஏழை மனைவாழ்க்கை 
முன்பு சொன்ன மோழை மையான் 
முட்டை மனத்தீரே 
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை 
அடிக ளடிசேரார் 
என்பர் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7294:
தந்தை யாரும் தவ்வை யாரும் 
எட்டனைச் சார்வாகார் 
வந்து நம்மோ டுள்ள ளாவி 
வான நெறிகாட்டுஞ் 
சிந்தை யீரே நெஞ்சி னீரே 
திகழ்மதி யஞ்சூடும் 
எந்தை கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7295:
குருதி சோர ஆனையின் றோல் 
கொண்ட குழற்சடையன் 
மருது கீறி ஊடு போன 
மாலய னும்மறியாச் 
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் 
சோதியெம் ஆதியான் 
கருது கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே. 

7-7-7296:
முத்து நீற்றுப் பவள மேனிச் 
செஞ்சடை யான்உறையும் 
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் 
பரமனை யேபணியச் 
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் 
சடைய னவன்சிறுவன் 
பத்தன் ஊரன் பாடல் வல்லார் 
பாதம் பணிவாரே.