திருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) ஆலய தேவாரம்
திருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) ஆலயம்7-7-7286:
மத்த யானை ஏறி மன்னர்
சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7287:
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு
துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு
நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7288:
செடிகொ ளாக்கை சென்று சென்று
தேய்ந்தொல் லைவீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்
பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7289:
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
வஞ்ச மனத்தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங்
கல்ல லில்வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7290:
அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
காறலைப் பான்பொருட்டாற்
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்
ஊர்ப்பு றஞ்சேராமுன்
வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர்
வஞ்ச மதில்மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7291:
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோ டாடி
நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த
அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7292:
கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்
செற்ற மனம்நீக்கி
வாசம் மல்கு குழலி னார்கள்
வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7293:
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு
ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழை மையான்
முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
அடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7294:
தந்தை யாரும் தவ்வை யாரும்
எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி
வான நெறிகாட்டுஞ்
சிந்தை யீரே நெஞ்சி னீரே
திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7295:
குருதி சோர ஆனையின் றோல்
கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
மாலய னும்மறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
சோதியெம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
7-7-7296:
முத்து நீற்றுப் பவள மேனிச்
செஞ்சடை யான்உறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்
பாதம் பணிவாரே.