HolyIndia.Org

திருசாய்க்காடு (சாயாவனம்) ஆலய தேவாரம்

திருசாய்க்காடு (சாயாவனம்) ஆலயம்
2-38-1873:
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே. 

2-38-1874:
பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 

2-38-1875:
நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை
தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே. 

2-38-1876:
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே. 

2-38-1877:
ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே. 

2-38-1878:
துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே. 

2-38-1879:
வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே. 

2-38-1880:
இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே. 

2-38-1881:
மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே. 

2-38-1882:
ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே. 

2-38-1883:
ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே. 

2-41-1906:
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே. 

2-41-1907:
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே. 

2-41-1908:
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. 

2-41-1909:
கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே. 

2-41-1910:
கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே. 

2-41-1911:
சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே. 

2-41-1912:
மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே. 

2-41-1913:
தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்
படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையால் தடவரைத்தோ @ன்றினான் சாய்க்காட்டை
இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே. 

2-41-1914:
வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே. 

2-41-1915:
குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே. 

2-41-1916:
நொம்பைந்து புடைத்தொல்கு நுபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே. 

4-65-4787:
தோடுலா மலர்கள் தூவித் 
தொழுதெழு மார்க்கண் டேயன் 
வீடுநாள் அணுகிற் றென்று 
மெய்கொள்வான் வந்த காலன் 
பாடுதான் செல்லு மஞ்சிப் 
பாதமே சரண மென்னச் 
சாடினார் காலன் மாளச் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4788:
வடங்கெழு மலைமத் தாக 
வானவர் அசுர ரோடு 
கடைந்திட எழுந்த நஞ்சங் 
கண்டுபல் தேவ ரஞ்சி 
அடைந்துநும் சரண மென்ன 
அருள்பெரி துடைய ராகித் 
தடங்கடல் நஞ்சம் உண்டார் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4789:
அரணிலா வெளிய நாவல் 
அருள்நிழ லாக ஈசன் 
வரணிய லாகித் தன்வாய் 
நுலினாற் பந்தர் செய்ய 
முரணிலாச் சிலந்தி தன்னை 
முடியுடை மன்ன னாக்கித் 
தரணிதான் ஆள வைத்தார் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4790:
அரும்பெருஞ் சிலைக்கை வேட 
னாய்விறற் பார்த்தற் கன்று 
உரம்பெரி துடைமை காட்டி 
ஒள்ளமர் செய்து மீண்டே 
வரம்பெரி துடைய னாக்கி 
வாளமர் முகத்தின் மன்னுஞ் 
சரம்பொலி தூணி ஈந்தார் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4791:
இந்திரன் பிரமன் அங்கி 
எண்வகை வசுக்க ளோடு 
மந்திர மறைய தோதி 
வானவர் வணங்கி வாழ்த்தத் 
தந்திர மறியாத் தக்கன் 
வேள்வியைத் தகர்த்த ஞான்று 
சந்திரற் கருள்செய் தாருஞ் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4792:
ஆமலி பாலும் நெய்யும் 
ஆட்டிஅர்ச் சனைகள் செய்து 
பூமலி கொன்றை சூட்டப் 
பொறாததன் தாதை தாளைக் 
கூர்மழு வொன்றால் ஓச்சக் 
குளிர்சடைக் கொன்றை மாலைத் 
தாமநற் சண்டிக் கீந்தார் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4793:
மையறு மனத்த னாய 
பகீரதன் வரங்கள் வேண்ட 
ஐயமில் லமர ரேத்த 
ஆயிர முகம தாகி 
வையகம் நெளியப் பாய்வான் 
வந்திழி கங்கை யென்னுந் 
தையலைச் சடையில் ஏற்றார் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4794:
குவப்பெருந் தடக்கை வேடன் 
கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந் 
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் 
தூயவாய்க் கலசம் ஆட்ட 
உவப்பெருங் குருதி சோர 
ஒருகணை யிடந்தங் கப்பத் 
தவப்பெருந் தேவு செய்தார் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4795:
நக்குலா மலர்பன் னுறு 
கொண்டுநன் ஞானத் தோடு 
மிக்கபூ சனைகள் செய்வான் 
மென்மல ரொன்று காணா 
தொக்குமென் மலர்க்கண் ணென்றங் 
கொருகணை யிடந்து மப்பச் 
சக்கரங் கொடுப்பர் போலுஞ் 
சாய்க்காடு மேவி னாரே. 

4-65-4796:
புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து 
மாயகொண் டரக்க னோடிச் 
சிவன்திரு மலையைப் பேர்க்கத் 
திருமலர்க் குழலி யஞ்ச 
வியன்பெற எய்தி வீழ 
விரல்சிறி தூன்றி மீண்டே 
சயம்பெற நாம மீந்தார் 
சாய்க்காடு மேவி னாரே. 

6-82-7056:
வானத் திளமதியும் பாம்புந் தன்னில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையுந் தீமையு மானார் போலுந்
தேனொத் தடியார்க் கினியார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7057:
விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7058:
கானிரிய வேழ முரித்தார் போலுங்
காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்
உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7059:
ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங்
கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் 
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7060:
கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங்
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்
ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்
சீர்மல்கு பாட லுகந்தார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7061:
மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரைகழலா லன்று குமைத்தார் போலுந்
தேவாதி தேவர்க் கரியார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7062:
கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்
காரோணத் தென்று மிருப்பார் போலும்
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்
படியொருவ ரில்லாப் படியார் போலும்
பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ்
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7063:
விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ்
சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்
சிலையினார் செங்க ணரவர் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7064:
அல்ல லடியார்க் கறுப்பார் போலும்
அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்
தில்லை நடமாடுந் தேவர் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. 

6-82-7065:
உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால்
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.