Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | மேலைதிருக்காட்டுப்பள்ளி |
இறைவன் பெயர் : | தீயாடியப்பர் |
இறைவி பெயர் : | சௌந்தர நாயகி |
தல மரம் : | வன்னி, வில்வம் |
தீர்த்தம் : | அக்கினி தீர்த்தம், காவிரி |
வழிபட்டோர்: | அக்கினி, திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி |
எப்படிப் போவது : | இத்தலம் தஞ்சாவூரில் இருந்து 30 கி.மி. தொலவிலும், பூதலூர் (திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கம்) ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மி. தொலைவிலும் அமைந்திருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | மேலைதிருக்காட்டுப்பள்ளி |
ஆலயம் பற்றி : மேலைத் திருக்காட்டுப்பள்ளி சிவாலயம் 5 நிலை கோபுரத்துடனும், ஐந்து பிரகாரங்களைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது. மூலவர் தீயாடியப்பர் கருவறை தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளப்பகுதியில் இருக்கிறது. சிவலிங்கம் உருவில் சிறியது. லிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க அனுமதிப்பதில்லை. பக்தர்கள் சற்று தூரத்திலிருந்து தான் இறைவனை வழிபட வேண்டும். இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணுவிற்கு தனி ஆலயமில்லை. தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விஷ்னு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சினாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சினாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சினாமூர்த்தியைப் பார்க்கலாம். சோழ, பாண்டிய, விஜய நகர பேரரசர்கள் இத்தலத்தில் ஆலய திருப்பணிகள் செய்திருக்கின்றனர். தல புராண வரலாறு: புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். தல வரலாறு மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது. (காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். இஃது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.) அக்கினி வழிபட்ட தலமாதலின் இக்கோயிலுக்கு "அக்னீஸ்வரம்" என்று பெயர். உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள், இளைய மனைவி தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண், மாரியால் (மழை) அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகிறது. சிறப்புக்கள் இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் முதலிய நாட்களில் நீராடி வழிபடுதல் சிறப்பென்பர். இக்கோயிலிலுள்ள நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. மூலவர் - சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். படிகள் இறங்கி சுற்றி வலம் வரலாம். முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில் ( "பள்ளி " என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.) ...திருசிற்றம்பலம்... |