HolyIndia.Org

திருக்கோணமலை ஆலய தேவாரம்

திருக்கோணமலை ஆலயம்
3-123-4121:
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4122:
கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடும் உடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4123:
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேற்
தனித்தபே ருருவ விழித்தழல் நாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4124:
பழித்திளங் கங்கை சடைமுடி வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனும் இப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4125:
தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி நுழைதரு நுலினர் ஞாலங்
கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4126:
பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4127:
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலால் ஏத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும் இறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வுங்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர் கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4128:
அருவரா தொருகை வெண்டலை யேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையும் நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம்ஒள் ளெரியாய் உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்குங்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4129:
நின்றுணுஞ் சமணும் இருந்துணுந் தேரும் நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லிய லொடும்உட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே. 

3-123-4130:
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலை யீரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.