HolyIndia.Org

திருச்சோபுரம் (தியாகவல்லி) ஆலய தேவாரம்

திருச்சோபுரம் (தியாகவல்லி) ஆலயம்
1-51-548:
வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி 
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங் 
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத் 
தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே. 

1-51-549:
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு 
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங் 
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத் 
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே. 

1-51-550:
தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச் 
சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம் 
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த 
தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே. 

1-51-551:
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந் 
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம் 
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந் 
தொல்லைய[ழி யாகிநின்றாய் சோபுர மேயவனே. 

1-51-552:
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம் 
ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம் 
ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித் 
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே. 

1-51-553:
கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன் 
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம் 
அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர் 
துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே. 

1-51-554:
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார் 
கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம் 
வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில் 
துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. 

1-51-555:
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர் 
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம் 
இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால் 
துலங்கவு[ன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே. 

1-51-556:
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர் 
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம் 
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந் 
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே. 

1-51-557:
புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப் 
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம் 
மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல் 
துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே. 

1-51-558:
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச் 
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான் 
ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன 
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே.