HolyIndia.Org

திருநணா (பவானி) ஆலய தேவாரம்

திருநணா (பவானி) ஆலயம்
2-72-2245:
பந்தார் விரல்மடவாள் பாகமா 
நாகம்பூண் டேற தேறி 
அந்தார் அரவணிந்த அம்மா 
னிடம்போலும் அந்தண் சாரல் 
வந்தார் மடமந்தி கூத்தாட 
வார்பொழிலில் வண்டு பாடச் 
செந்தேன் தெளியொளிரத் தேமாக் 
கனியுதிர்க்குந் திருந ணாவே. 

2-72-2246:
நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் 
மற்றொருகை வீணை யேந்தி 
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா 
னிடம்போலு மிலைசூழ் கானில் 
ஓட்டந் தருமருவி வீழும் 
விசைகாட்ட முந்தூ ழோசைச் 
சேட்டார் மணிகள் அணியுந் 
திரைசேர்க்குந் திருந ணாவே. 

2-72-2247:
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் 
பாகமாய் ஞால மேத்த 
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க் 
கிடம்போலும் விரைசூழ் வெற்பில் 
குன்றோங்கி வன்றிரைகள் மோத 
மயிலாலுஞ் சாரற் செவ்வி 
சென்றோங்கி வானவர்க ளேத்தி 
அடிபணியுந் திருந ணாவே. 

2-72-2248:
கையில் மழுவேந்திக் காலிற் 
சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு 
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் 
கிடம்போலு மிடைந்து வானோர் 
ஐய ரவரெம் பெருமா 
னருளென்றென் றாத ரிக்கச் 
செய்ய கமலம் பொழிதே 
னளித்தியலுந் திருந ணாவே. 

2-72-2249:
முத்தேர் நகையா ளிடமாகத் 
தம்மார்பில் வெண்ணூல் பூண்டு 
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா 
ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த 
அத்தேன் அளியுண் களியா 
லிசைமுரல ஆலத் தும்பி 
தெத்தே யெனமுரலக் கேட்டார் 
வினைகெடுக்குந் திருந ணாவே. 

2-72-2250:
வில்லார் வரையாக மாநாகம் 
நாணாக வேடங் கொண்டு 
புல்லார் புரமூன் றெரித்தார்க் 
கிடம்போலும் புலியு மானும் 
அல்லாத சாதிகளு மங்கழல்மேற் 
கைகூப்ப அடியார் கூடிச் 
செல்லா வருநெறிக்கே செல்ல 
அருள்புரியுந் திருந ணாவே. 

2-72-2251:
கானார் களிற்றுரிவை மேல்மூடி 
ஆடரவொன் றரைமேற் சாத்தி 
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் 
றானுகந்த கோயி லெங்கும் 
நானா விதத்தால் விரதிகள்நன் 
னாமமே யேத்தி வாழ்த்தத் 
தேனார் மலர்கொண் டடியார் 
அடிவணங்குந் திருந ணாவே. 

2-72-2252:
மன்னீ ரிலங்கையர்தங் கோமான் 
வலிதொலைய விரலா லூன்றி 
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் 
கிடம்போலும் முநனைசேர் சீயம் 
அன்னீர் மைகுன்றி அழலால் 
விழிகுறைய வழியு முன்றில் 
செந்நீர் பரப்பச் சிறந்து 
கரியொளிக்குந் திருந ணாவே. 

2-72-2253:
மையார் மணிமிடறன் மங்கையோர் 
பங்குடையான் மனைக டோ றும் 
கையார் பலியேற்ற கள்வன் 
இடம்போலுங் கழல்கள் நேடிப் 
பொய்யா மறையானும் பூமி 
யளந்தானும் போற்ற மன்னிச் 
செய்யார் எரியாம் உருவ 
முறவணங்குந் திருந ணாவே. 

2-72-2254:
ஆடை யொழித்தங் கமணே 
திரிந்துண்பார் அல்லல் பேசி 
மூடு உருவம் உகந்தார் 
உரையகற்றும் மூர்த்தி கோயில் 
ஓடு நதிசேரும் நித்திலமும் 
மொய்த்தகிலுங் கரையில் சாரச் 
சேடர் சிறந்தேத்தத் தோன்றி 
யொளிபெருகுந் திருந ணாவே. 

2-72-2255:
கல்வித் தகத்தால் திரைசூழ் 
கடற்காழிக் கவுணி சீரார் 
நல்வித் தகத்தால் இனிதுணரும் 
ஞானசம் பந்தன் எண்ணுஞ் 
சொல்வித் தகத்தால் இறைவன் 
திருநணா ஏத்து பாடல் 
வல்வித் தகத்தான் மொழிவார் 
பழியிலரிம் மண்ணின் மேலே.