HolyIndia.Org

திருஆப்பனூர் ஆலய தேவாரம்

திருஆப்பனூர் ஆலயம்
1-88-948:
முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன் 
ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான் 
செற்றமில் சீரானைத் திருஆப்ப னுரானைப் 
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

1-88-949:
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர் 
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின் 
அரவம் அணிந்தானை அணியாப்ப னுரானைப் 
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

1-88-950:
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன் 
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின் 
அரவம் அணிந்தானை அணியாப்ப னுரானைப் 
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

1-88-951:
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில் 
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான் 
அணியும் புனலானை அணியாப்ப னுரானைப் 
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

1-88-952:
தகர மணியருவித் தடமால்வரை சிலையா 
நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான் 
அகர முதலானை அணியாப்ப னுரானைப் 
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

1-88-953:
ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக் 
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில் 
ஆடுந் தொழிலானை அணியாப்ப னுரானைப் 
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

1-88-954:
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக் 
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட 
இயலும் இசையானை எழிலாப்ப னுரானைப் 
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

1-88-955:
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான் 
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி 
அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னுரானைப் 
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

1-88-956:
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும் 
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல் 
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னுரானைப் 
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே. 

1-88-957:
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள் 
பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை 
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னுரானைப் 
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே. 

1-88-958:
அந்தண் புனல்வைகை அணியாப்ப னுர்மேய 
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை 
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன் 
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.