HolyIndia.Org

அகத்தியான்பள்ளி ஆலய தேவாரம்

அகத்தியான்பள்ளி ஆலயம்
2-76-2291:
வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள் 
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி 
ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப் 
பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே. 

2-76-2292:
துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான் 
மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர் 
அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை 
உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே. 

2-76-2293:
உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங் 
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால் 
அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே. 

2-76-2294:
காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் 
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை 
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. 

2-76-2295:
போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை 
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக் 
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே. 

2-76-2296:
தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் 
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை 
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே. 

2-76-2297:
ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச் 
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் 
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை 
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே. 

2-76-2298:
செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம் 
ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம் 
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. 

2-76-2299:
சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் 
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் 
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை 
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. 

2-76-2300:
செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி 
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி 
அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச் 
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. 

2-76-2301:
ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் 
ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள் 
சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய 
மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே.