HolyIndia.Org

திருமயேந்திரப்பள்ளி ஆலய தேவாரம்

திருமயேந்திரப்பள்ளி ஆலயம்
3-31-3129:
திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங் 
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும் 
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள் 
அரவரை அழகனை அடியிணை பணிமினே. 

3-31-3130:
கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை 
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும் 
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற் 
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே. 

3-31-3131:
கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந் 
தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு 
மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள் 
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே. 

3-31-3132:
வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு 
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும் 
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள் 
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே. 

3-31-3133:
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் 
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன் 
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள் 
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே. 

3-31-3134:
சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் 
இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன் 
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள் 
அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே. 

3-31-3135:
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட 
நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு 
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள் 
அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே. 

3-31-3136:
சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக் 
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன் 
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள் 
அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே. 

3-31-3137:
நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன் 
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர் 
மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள் 
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே. 

3-31-3138:
உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும் 
படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர் 
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள் 
இடமுடை ஈசனை இணையடி பணிமினே. 

3-31-3139:
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள் 
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல் 
நம்பர மிதுவென நாவினால் நவில்பவர் 
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.