HolyIndia.Org

திருவேட்களம் ஆலய தேவாரம்

திருவேட்களம் ஆலயம்
1-39-415:
அந்தமும் ஆதியு மாகிய வண்ணல் 
ஆரழ லங்கை அமர்ந்திலங்க 
மந்த முழவம் இயம்ப 
மலைமகள் காண நின்றாடிச் 
சந்த மிலங்கு நகுதலை கங்கை 
தண்மதியம் மயலே ததும்ப 
வெந்தவெண் ணீறு மெய்பூசும் 
வேட்கள நன்னக ராரே. 

1-39-416:
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச் 
சங்கவெண் டோ டு சரிந்திலங்கப் 
புடைதனிற் பாரிடஞ் சூழப் 
போதரு மாறிவர் போல்வார் 
உடைதனில் நால்விரற் கோவண ஆடை 
உண்பது மூரிடு பிச்சைவெள்ளை 
விடைதனை ஊர்தி நயந்தார் 
வேட்கள நன்னக ராரே. 

1-39-417:
பூதமும் பல்கண மும்புடை சூழப் 
பூமியும் விண்ணும் உடன்பொருந்தச் 
சீதமும் வெம்மையு மாகிச் 
சீரொடு நின்றவெஞ் செல்வர் 
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை 
உள்ளங் கலந்திசை யாலெழுந்த 
வேதமும் வேள்வியும் ஓவா 
வேட்கள நன்னக ராரே. 

1-39-418:
அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம் 
அமையவெண் கோவணத் தோடசைத்து 
வரைபுல்கு மார்பி லோராமை 
வாங்கி யணிந் தவர்தாந் 
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந் 
தேனலங் கானலில் வண்டுபண்செய்ய 
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த 
வேட்கள நன்னக ராரே. 

1-39-419:
பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் 
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த 
பெண்ணுறு மார்பினர் பேணார் 
மும்மதில் எய்த பெருமான் 
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட் 
கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும் 
வெண்ணிற மால்விடை அண்ணல் 
வேட்கள நன்னக ராரே. 

1-39-420:
கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற் 
கண்கவ ரைங்கணை யோனுடலம் 
பொறிவளர் ஆரழ லுண்ணப் 
பொங்கிய பூத புராணர் 
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர் 
மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை 
வெறிவளர் கொன்றையந் தாரார் 
வேட்கள நன்னக ராரே. 

1-39-421:
மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை 
மாமலை வேந்தன் மகள்மகிழ 
நுண்பொடிச் சேர நின்றாடி 
நொய்யன செய்யல் உகந்தார் 
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக் 
காலனைக் காலாற் கடிந்துகந்தார் 
வெண்பொடிச் சேர்திரு மார்பர் 
வேட்கள நன்னக ராரே. 

1-39-422:
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் 
அமுத மமரர்க் கருளி 
சூழ்தரு பாம்பரை யார்த்துச் 
சூலமோ டொண்மழு வேந்தித் 
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித் 
தண்மதி யம்மய லேததும்ப 
வீழ்தரு கங்கை கரந்தார் 
வேட்கள நன்னக ராரே. 

1-39-423:
திருவொளி காணிய பேதுறு கின்ற 
திசைமுக னுந்திசை மேலளந்த 
கருவரை யேந்திய மாலுங் 
கைதொழ நின்றது மல்லால் 
அருவரை யொல்க எடுத்த வரக்கன் 
ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த 
வெருவுற வு[ன்றிய பெம்மான் 
வேட்கள நன்னக ராரே. 

1-39-424:
அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர் 
யாதுமல் லாவுரை யேயுரைத்துப் 
பொய்த்தவம் பேசுவ தல்லால் 
புறனுரை யாதொன்றுங் கொள்ளேல் 
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச 
மூரிவல் லானையின் ஈருரி போர்த்த 
வித்தகர் வேத முதல்வர் 
வேட்கள நன்னக ராரே. 

1-39-425:
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி 
வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க 
நண்ணிய சீர்வளர் காழி 
நற்றமிழ் ஞானசம் பந்தன் 
பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து 
பேணிய வேட்கள மேல்மொழிந்த 
பண்ணியல் பாடல் வல்லார்கள் 
பழியொடு பாவமி லாரே. 

5-42-5645:
நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே. 

5-42-5646:
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே. 

5-42-5647:
வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே. 

5-42-5648:
அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே. 

5-42-5649:
துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே. 

5-42-5650:
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே. 

5-42-5651:
வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே. 

5-42-5652:
நட்ட மாடிய நம்பனை நாடொறும்
இட்டத் தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே. 

5-42-5653:
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே. 

5-42-5654:
சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
வாட வு[ன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.