ஆலயம் பற்றி :
இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலைகளை உடைய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. மூலவர் தேவபுரீசுவரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.
ஸ்தலவிருட்சம்: இத்தலத்து ஸ்தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது தேவலோகத்தில் உள்ள வெள்வாழையும் இறைவனை இங்கு வழிபட்டு ஸ்தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழைமரத்திற்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த ஸ்தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழைமரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.
தலத்தின் சிறப்பு: ராவணன் குபேரனுடன் போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பவளநிதி என்ற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான். குபேர ஸ்தானத்தை இழந்த குபேரன் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டதால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தைப் பெற்றான். குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட ஸ்தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.
இந்திரன் விருத்தன் என்ற அசுரனைக் கொன்ற பாவத்திற்கு இந்திர பட்டத்தை இழந்தபோது இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்றான். மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால் பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.
இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும்.கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் படுவதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள்.
திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் தேவூர் தலத்து இறைவனை திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.
...திருசிற்றம்பலம்... |