3556
புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையே
கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே
3557
புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே
3558
ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
நம்பினேன் கைவிடேல் எனையே
3559
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
நம்பினேன் கைவிடேல் எனையே
3560
வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
செயவல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே