1841
மைய லகற்றீ ரொற்றியுளீர்
வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச்
செவ்வ னுரைத்தா லிருவாவென்
றுய்ய வுரைப்பே மென்றார்நும்
முரையென் னுரையென் றேனிங்கே
யெய்யுன் னுரையை யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
1842
தாவென் றருளு மொற்றியுளீர்
தமியேன் மோக தாகமற
வாவென் றருள்வீ ரென்றேனவ்
வாவின் பின்னர் வருமெழுத்தை
மேவென் றதனிற் சேர்த்ததிங்கே
மேவி னன்றோ வாவென்பே
னேவென் றிடுகண் ணென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
1843
என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ
ரென்னை யணைவா னினைவீரேற்
பொன்மேல் வெள்ளி யாமென்றேன்
பொன்மேற் பச்சை யாங்கதன்மே
லன்மேற் குழலாய் சேயதன்மே
லலவ னதன்மேன் ஞாயிறஃ
தின்மே லொன்றின் றென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
1844
வயலா ரொற்றி மேவுபிடி
வாதர் நாம மியாதென்றேன்
மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர்
வந்த விளைய நாமமென்றார்
செயலார் கால மறிந்தென்னைச்
சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
கியலா ரயலா ரென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
1845
நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்
நாகம் வாங்க லென்னென்றேன்
காலாங் கிரண்டிற் கட்டவென்றார்
கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
வேலார் விழிமாப் புலித்தோலும்
வேழத் தோலும் வல்லேமென்
றேலா வமுத முகுக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ