1291
தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர்
மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும்
வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப்
போத மலரைநெஞ்சே போற்று
1292
போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி
கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம்
கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு
1293
கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
நள்ளவனை நெஞ்சமே நாடு
1294
நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர்
கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
உத்தமனை நெஞ்சமே ஓது
1295
ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி
ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
பாதம் பிடிக்கும் பயன்