1111
காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்
சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
ஏட நீகடை என்றிடில் அவர்முன்
ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
ஒற்றி மேவிய உலகுடை யோனே
1112
மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
ஒற்றி மேவிய உலகுடை யோனே
1113
வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
ஒற்றி மேவிய உலகுடை யோனே
1114
யாதும் உன்செய லாம்என அறிந்தும்
ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
கோது செய்மலக் கோட்டையைக் காவல்
கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
ஒற்றி மேவிய உலகுடை யோனே
1115
பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
உந்த மட்டினால் தருதியோ உரையாய்
ஒற்றி மேவிய உலகுடை யோனே