1086
தத்து மத்திடைத் தயிரென வினையால்
தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே
செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே
துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன்
புத்தை நீக்கிய ஒற்றிஅம் பரனே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே
1087
பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
வெய்ய மாயையில் கையற வடைந்தே
புரிந்து சார்கின்ற தொற்றிஅம் பரனே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே
டீயஉம
--------------------------------------------------------------------------------
ஆற்றா விண்ணப்பம்
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1088
அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே
அம்பலத் தாடல்செய் அமுதே
பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே
போதமே ஒற்றிஎம் பொருளே
உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன்
உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல்
இருக்கின்ற இவ்வெளி யேனே
1089
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன்
என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக்
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும்
கருணைசெய் திலைஅருட் கரும்பே
அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே
அருமருந் தேவட வனத்துத்
தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே
தயையிலி போல்இருந் தனையே
1090
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய்
என்துயர் அறிந்திலை போலும்
முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர்
முலைத்தலை உருண்டன னேனும்
மருந்தனை யாய்உன் திருவடி மலரை
மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்
வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா
வஞ்சகம் உனக்கும்உண் டேயோ